ஆர்.அபிலாஷ் அவர்களின் அப்பாவின் புலிகள் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். புனைவிலும் புனைவின்மையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். பொதுவாக மனித மனத்தின் சௌகரியமான பாதைகளிலேயோ அல்லது அசௌகரியமான பாதைகளிலேயோ பயணிப்பர், அனைத்து பாதைகளிலும் நாம் நம்பும் கலாச்சார விழுமியங்களின் எதார்த்த நிலையை கண்முன் விரிய செய்கிறார். மனித மனதின் அத்தனை சிந்தனை போக்குகளையும் அவருடைய பாணியில் சென்று அவரின் தனித்துவமான, உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் தொட்டு அணுகுகிறார். அந்த விதத்தில் தமிழில் வெளிவந்த அனைத்து சிறுகதை தொகுப்புகளிலும் தனித்து நிற்கிறது என்பேன். குறிப்பாக நான் பிறந்து வளர்ந்த குமரி நிலத்தின் வாசனையை அனேக இடங்களில் முகர்ந்தேன். உதாரணமாக குன்னி முத்து, நடுதண்ணி முத்தம் போன்ற காட்சி படிமங்கள் . தெளிவான விவரணை, கதை சொல்லும் நேர்த்தி என முதல் பத்தியிலையே முழுவதுமாக வாசகனை வசீகரித்து உள்ளிழுத்து வெளிவரமுடியாதபடி செய்கிறார், கவித்துவ உவமைகளால் வர்ணனைகளில் வண்ணம் தீட்டிக்கொண்டே நகர்வது வாசகனுக்கு பல்வேறு கற்பனை எண்ணங்களுக்கு வித்திடுகிறது. புனைவில் சில படிமங்களை வாசகன் நெருங்குகையில் அது தன்னை உருமாற்றம் செய்கிறது. இலக்கிய தரத்திலிருந்து வெளிவராமலும் வெகுஜன ரசனைக்கு உட்பட்டும் இருப்பது தனித்துவம். முக்கியமாக எழுத்து பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.