Tuesday 5 March 2019

உனக்கு 34 வயதாகிறது- எஸ். ராமகிருஷ்ணன்


நவீன தமிழ் மனம் உடைய சுகந்தி எனும் பெண்ணிற்கும் மரபின் பிரதிநிதியான அவளின் தந்தைக்கும் நடக்கும் கலாச்சார உளசிக்கல்தான் எஸ். ராமகிருஷ்ணனின் “உனக்கு 34 வயதாகிறது”. முப்பதைத்தாண்டும் சுகந்திக்கு திருமணம் ஆகவில்லை என தந்தையின் கவலை நாளுக்குநாள் அதிகமாகிறது. அண்ணன், தம்பி என இருவரும் திருமணம் ஆகி மரபிற்குள் தங்கிவிட, அதனை மீறும் திருமணம் மீது நம்பிக்கையற்ற சுதந்திர மனம் உடையவளாக சுகந்தி காணப்படுகிறாள். ஊரிலிருந்து மகளைக் காணவரும் தந்தை மகளின்  வீட்டில் தங்குவது வழக்கம். அங்கே தங்குகையில் திருமணம் செய்ய சொல்லி மிகுந்த அழுத்தம் தருகிறார். அது அவளிற்கு எரிச்சல் தந்தாலும் காலத்தின் சலனம் மற்றும் அதிலிருந்து விடுபடுதல்கள் மூலம் வாழ்வை மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

சுகந்தி கதாபாத்திரத்தின் உளவியல் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன சமூகம் திருமணம் என்னும் அமைப்பிற்குள் சென்றால்  சுயசுதந்திரம் பறிபோய்விடும் என நினைக்கிறது. அதற்கான சாயல்கள் இந்த சமூகத்தில் வலுவாக தென்பட, திருமணம் மீது அவநம்பிக்கை கொண்டவளாக காணப்படுகிறாள். ஆனால் முழுமையாக அவளிடம் ஒரு பின்நவீனத்துவ உளநிலை தென்படவில்லை. காரணம் தன் விடுதலை மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் தன் நம்பிக்கைகளை சிதைக்கும் விதமாக நடந்துக் கொள்ளும் தன் குடும்பத்தையும், உறவுகளையும் முழுமையாக இழக்கவும் விரும்பவில்லை. இந்த நிலையில் நவீன பெண்கள் கொள்ளும் நிலை அவலம். சிந்தனை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். என்னதான் உறவாக இருப்பினும் அவர்களின் எள்ளல் கூட ஒரு கட்டத்தை தாண்டுகையில்  தன் கொந்தளிப்பையும் காட்டத் தவறுவதில்லை. அதுதான் அண்ணன் மனைவியுடன் அவள் கொள்ளும் பிணக்கு. தன்னைவிட இரு வயது குறைந்தவள் திருமணம் ஆகி குழந்தை பெற்று விட்டோம் என்பதற்காக தன் மீது அதிகாரத்தை செலுத்தும் மனநிலையை திருமணம் அளிக்கிறது. இது ஒரு முக்கியமான இடம். இந்த சமூகம் வயது, அந்தஸ்து, அழகை விட திருமணம் என்பது மிஞ்சிய அங்கீகாரமாக கருதுகிறது.
திருமணம் என்னும் அமைப்பிற்குள் பெண்கள் சிக்குவதால் தான் கொண்ட சுதந்திரம் முழுமையாக பறிபோய்விடும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது இணையரின் மனநிலையைப் பொருத்தது. பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம். திருமணத்தினால் தன் வாழ்வை நிறைவாக கொண்டு போக முடியாது என ஒரு பெண்ணின் மனம் முடிவெடுத்தால், அந்த முடிவின் தெளிவு அப்பெண்ணின் உள்ளுணர்வுசார் உளோநிலையின்  பிரதிபலிப்பு ஆகும். எப்படியிருந்தாலும் அந்த நிலையை இன்னொருவரால் அதன் வீச்சை  புரிந்துக்கொள்வது சிரமம். ஆனால் சமூகம் அப்படியெல்லாம் உங்களை சுயமுடிவெடுக்க விடமாட்டோம் என குரல்வளையை பிடித்து நெருக்குகிறது.
திருமணம் செய்யவில்லை என்றால் உங்களுக்கும் வரப்போகும் அபாயங்கள் என ஒரு பெரும்பட்டியலை தயார் செய்கிறது. அதில் இருக்கும் எதிர்மறையான அபாயங்கள் அனைத்தும் மரபான ஒரு காலாவதியான கலாச்சார உளநிலையில் ஆழ்ந்து படிந்துக் காணப்படுகிறது. ஒரு பெண் திருமணம் ஆகவில்லை என்றால் அவளுக்கு இன்னென்ன ரீதியிலான பிரச்சனைகள் வரும் என்பது எதார்த்தமான உண்மை. அது வெகுஜன உளவியலின் எதிர்மறையான நிலைப்பாடு. நவீன பெண்ணிற்கு தன் மனம் சுதந்திரம் அடைய வேண்டும் என விரும்பினாலும் தனக்கு உண்டான நெருக்கடியை நினைத்து உளநிலை தடுமாற்றம் அடையும். மேலும் மரபான தம் அன்பிற்குரிய நபர் தன்னால் அடையும் தடுமாற்றம் அதனால் உருவாகும்  பிறழ்வை பொருட்படுத்தாமலும் அவளால் கடக்க இயலாது. அதே நேரம் தன் சுதந்திர மனநிலையை இழந்து போலியான வாழ்வை வாழ விருப்பமும் இல்லை. இந்த சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்  அதன் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களுக்கு அதனால் உருவாகும் சீண்டல்களையும் பொருட்படுத்தி தற்பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் உடல் அல்லது மன ரீதியாக தற்காலிகமாக ஒரு உறவுடன் இணைகையில் சரியான பின்நவீனத்துவ. நிற்க, வெறும்  நவீன புரிதல் இல்லையெனில் தன் சுதந்திர வாழ்வின் மீதே சந்தேகம் கொள்ளும் பொருட்டு உள நெருக்கடி ஏற்பட வாய்ப்பும் உள்ளது. சுய சுதந்திரம், தற்பாதுகாப்பு, அன்பிற்குரியவரின் நெருக்கடியை சமாளித்தல் என மூன்றையும் எதிர்கொண்டு தான் சுயமான வாழ்வை ஒரு நவீன மனம் படைத்த பெண்ணிற்கு வாழ இயலும்.
சமூகத்தின் மரபார்ந்த மனங்களில் எப்படி மாற்றத்தை உருவாக்குவது? உடனே ஒருவரை நவீனத்தை பற்றின புரிதலுடன் சுதந்திரமான வாழ்வை பற்றி புரிய வைத்தல் சிரமம். ஆனால் கலை என்னும் பேராயுதம் வழி நல்ல இலக்கியம், கவிதை, சினிமா வழி தரமான நவீனம் சார்ந்த புரிதல்களை அவர்களுக்கு அறியாமலே கலைவழி மெல்ல ஒரு சமூகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க முடியுமாயின் சமூகம் மேம்பாடு நிச்சியம் நிகழும். அதன் கால அளவு என்பது நூற்றாண்டுகூட ஆகலாம். ஆனால் மேம்பட்ட சமூகங்களில் வெறும் பிரச்சாரம் கொண்டு தற்காலிக மேம்படுத்தல் அல்லாமல் ஆழமான, செறிவான கலைகள் வழி நவீனம் சார்ந்த புரிதலுடன் மேன்மையடைந்த சமூகம் அதிகம். நம் சமூகமும் இந்த நிலையை வந்தடைந்ததில் கலைக்கு பெரும்பங்கு உள்ளது. தீர்வுகளை முன்வைக்கும் அரசியல் இல்லாத விவாதத்தை உண்டுபண்ணும் கலை இச்சமூகத்தில் நிகழுமாயின் எதிர்காலத்தில் சுகந்திகள் சுதந்திரத்தின் ருசியை மேலும் உணர்வார்கள்.