அபினி நூல் வெளியீட்டில் கவிஞர் இளங்கோ
கிருஷ்ணன் ஆற்றிய உரை மிகச் செறிவாக இருந்தது. கவி மனங்களை
கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியொரு நுட்பமான கவிஞரை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறேன்.
காரணம் அவர் கண் விழிக்கையில் காணும் புறக்காட்சிகளிலிருந்து, பீட்டா மனம்
யோசிக்கும் அகக்காட்சிகள், அதிலிருக்கும் சப்தங்கள், அதற்காக வழங்கப்பட்டிருக்கும்
மொழிகொண்டு அகத்திற்குள் செயல்படும் தன்மை என வெளி உலகின் காட்சிக்கும், சத்ததிற்கும் தனித்தனியாக
கூறாய்வு செய்து உள்வாங்குகிறார். அதில் இருக்கும் லயம், வேதிக்கூறுகள் என அனைத்தையும்
அவரால் பகுப்பாய்வு செய்ய முடிகிறது.
அபினி நாவல் பற்றி புதிய பார்வையிலான கோணங்களை
முன்வைத்து, சில முக்கியமான தருணங்களை எனக்குள் வெளிச்சம் இட்டு காட்டினார். இந்த
நாவலை எந்த புள்ளியில் எழுத தொடங்கினேன் என்றால், தஸ்தாயேவஸ்கியின் “கரமசாவ்
சகோதரர்கள்” படித்து முடித்தபோதுதான். அதை ஒரு குறிப்பிட்ட தரப்புக்குள் அடக்க
முடியாதென்றே கருதுகிறேன். மனிதன் தன் வாழ்நாளில் கண்ட, காணப்போகும் அனைத்துவித
மனித மனங்களையும் அந்த ஒரே பிரதியில் அறிந்துக் கொள்ளலாம். அப்படி ஒரு பிரமாண்டமான
நாவல் வடிவம் அது. அதில் நான் கண்டுக்கொண்ட ஒரு சிறுக்கூறுதான் இருத்தலியம். அதற்குள்
நவீனத்தை புகுத்தியதற்கான காரணம், இந்த சமூகத்திற்கான தற்போதைய தேவையாக
உணர்கிறேன்.
இந்த வகையறா நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள்
நாம் அதிகம் காணும் மனநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அந்நிய நிலையில்
அணுகும் என குறிப்பிட்டிருந்தார். உதாரணமாக ஜேஜே சில குறிப்புகள், 18 ஆவது
அட்சக்கோடு ஆகிய படைப்புகளைக் குறிப்பிட்டார். அப்போது மீண்டும் எனக்குள் ஒரு பெரும்
வெளிச்சத்தை பாய்ச்சியதை உணர முடிந்தது. காரணம் நானே இந்த பொது சமூகத்திற்குள்
வாழ்ந்தாலும், முற்றிலும் அந்நியனாக உணர்பவன். எனக்கும் பொது சமூகத்திற்குமான
இடைவெளி பெரிதாக இருப்பதால், எனக்கும் என் எழுத்துக்குமே மிகப்பெரிய இடைவெளி உருவாகிறது.
ஆனால் தற்போது அது படிப்படியாக குறைந்து மனிதர்கள்மேல் பிரியம் உருவாகிறதையும்
உணர்கிறேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குள் நிகழ்த்திக்கொண்ட ஒரு போர்
எனலாம். என்னிடமுள்ள ஆண்மைக்கும், பெண்மைக்கும் இடையிலான போர். அதை எழுதியது மிகச்
சவாலாக இருந்தது. ஒரு ஆண் எழுத்தாளர் ஒரு பெண்ணை எழுதும்போது அதற்கு ஒரு
உயிர்க்குறிப்பு உள்ளுக்குள் இருக்கும். என்னிடம் முழுவதுமாக அப்படி எந்த
குறிப்பும் இல்லை.
இந்த நாவலைப்பற்றி எனது பதிப்பாளர் கார்த்திக்
புகழேந்தி கூறிய கருத்தையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். “பொதுவாக தமிழ் சூழலில்
கடந்தக்கால வாழ்வியல் அனுபவங்களை, நினைவுகளை, அல்லது தற்போதை யதார்த்தவாத
நடப்புகளை மட்டுமே சுவைத்து அதன்வழி தன்னிலை உணர்வை பக்குவப்படுத்துவதுதான் நம் பெரும்பான்மை மரபு. எதிர்காலத் தன்மை கொண்ட
படைப்புகள் உடனடி கவனம் பெறாது, ஆனால் நிராகரிப்புக்கு சாத்தியமே இல்லை”.