Friday 21 June 2019

சுயவதை மனிதன்


நம் சமூகத்தில் பொருளாதரத்தில் மேம்பட்டு சமூக அந்தஸ்தில் அங்கீகாரம் அடைந்தபின், அதற்காக தான் அனுபவித்த பாடுகளையும், அதன்மூலம் வாழ்வை வென்றதையும் எண்ணிஎண்ணி சிலாகித்து, கடந்த காலத்தின் மூலமாக தன்னை ஒரு பலமான ஆளுமையாக முன்னிறுத்துவது உண்டு.

மனிதன் அதிகபடியான கஷ்டபாடுகளை அனுபவித்து வாழ்வை வெல்கிறான். வென்றபின் அவனின் போராட்ட வாழ்க்கை செய்தியாகி, வரலாறாகி ஒரு தன்னம்பிக்கை மனிதராக இந்த சமூகத்தில் இடம்பெறுகிறான். இந்த வெற்றியை அடைவதற்கு பெரும்பாலும் தன்னை சுயவதைக்கு ஒப்புதருகிறான். விதிவிலக்குகள் சில இருக்கலாம்.

முன்பு ஒருமுறை என் நண்பன் ஒருவன் வாழ்வில் நிறைய பிரச்சனைகள் எதிர்கொண்டான். அதை பற்றி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் என் வாழ்வில் இவ்வளவு இடர்கள் போதாது இன்னும் நிறைய சிக்கல்கள்,பிரச்சனைகள் வேண்டும் என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் புரிந்தது அவன் இடர்களை வலைவீசி தேடி தன்னகதிற்குள் போடுகிறான் என்று. அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் அவன் மட்டும்தான் என புரிந்தது. இவ்வளவு இடர்களை எதிர்கொண்டால் மட்டுமே தான் இந்த சமூகத்தில் சாதனை அல்லது சாகச மனிதர்காளாக அறிவிக்கப்படமுடியும் என நம்புகிறான். வலுவான பிரச்சனை கிடைக்காதவர்கள் எளிய பிரச்சனையை பெரிதுபடுத்தி துன்பதிற்குள் பிரவேசிக்கிறார்கள். இந்த மனநிலை பொதுவான லவுகீகம் தொடங்கி கலைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் சுயம் வதைவதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது ஒரு வழக்கொழிந்த பழமையான நிலை என்றே கருதுகிறேன்.  இப்படி வெற்றி பெறும் மனிதன் தன் திறமையை மிஞ்சிய நிலையில்(Overated) வெற்றியடைகிறான். சிரமங்களை முன்னிறுத்தி முன்னேற்றம் காண்பவனிடம் கற்றல் என்பது நேர்த்தியாக நிகழாது. கற்றல், அறிதல் என்பது முன்னேற்றத்திற்கு தேவையில்லாதது என நம்ப தொடங்குகிறான். இப்படி அவனிடம் பழமைவாதமும் தன் சுயமாக தேடித்தேடி அனுபவித்த துன்பங்கள் பற்றிய பெருமிதங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் பிற்காலத்தில் இந்த சுயவதை மனிதர்கள்தான்  சமூகத்தில் மிக சக்தி வாய்ந்த மனிதர்களாக உருவாகிறார்கள். காரணம் சமூகம் இவர்கள் தேடித்தேடி அடைந்த துயரங்களை நாயகத்தன்மையாக கருதுகிறது. இதனால் ஒரு சூப்பர் மனிதனாக கருதப்படுகிறான். உதாரணமாக தன்னுடைய ஆதர்சமான நடிகர் ஒருவர் சிறப்பாக ஒரு படத்தில் பங்காற்றியுள்ளார் என்பதைவிட அவரின் வாழ்கை வரலாற்றைக் கொண்டே மதிப்பிடல்கள், சமூகத்தில் அந்த நடிகருக்கான நாயகபிம்பம்  கட்டமைக்கப்படுகிறது. இது ஒரு உணர்வுசார்ந்த மோசடியாகும். திறமைக்கு எதிரான போக்கு. அதீத திறமையுடன் முடங்கி போய்க்கிடப்பவர்களை ஒரு பெரும் பட்டியல் போட முடியும்.

தமிழகத்தில்  பெரும்பாலும் சினிமா அல்லது ஊடகத்தை முன்னிறுத்தி வருபவர்களே வெற்றியாளர்கள் என காலம்காலமாக நம்பவைக்கப்பட்டுளது. அதிலும் திரைப்பட உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் இயக்குனராகும் காலம் என்பதுதான் மிகக் கொடியது. எனக்கு தெரிந்த நண்பர் தன் தினசரி சிக்கல்களை மிகைபடுத்தி கூறிக்கொண்டே இருப்பார். கூறிமுடித்தபின் சீக்கிரம் பெரிய ஆளாக வேண்டும். சாதிக்க வேண்டும் எனக் கூறுவார். அதிலிருந்துதான் புரிந்துக் கொண்டேன் தினசரி சிக்கல்களை தினம் அசைபோடுவது தான் சாதிப்பதற்கான ஊக்கமருந்து என்று. அவர்கள் விரும்புவது போன்றே திரையுலகம் போராட்ட வாழ்வை பின்னலாய் பிணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமா உருவாக்குதல் தளத்தில் முதுகெலும்பாய் செயல்படும் உதவி இயக்குனருக்கு முறையான சம்பளம் இன்றுவரை இல்லை. படைப்புலகில் வெறும் கஷ்டபாடுகளினாலே முன்னணிக்கு வருகையில் திறமை மூன்றாம் பட்சம் ஆகிறது. திறமையாளர்களை விட, தான் மேலானவர் என்ற நம்பிக்கைக்குள் நுழைகிறார்கள். திறமையும் நுண்கலைநோக்கு படைத்தவரை மூன்றாம்பட்சம் ஆக்குகையில் கலை ஒடுக்கப்படுகிறது. அதனால் சமூகம் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. சுயவதை மனிதன் கலையுலகில் மட்டும் இருப்பதில்லை. அனைத்திடங்களிலும் ஆடையில் ரத்தக்கறையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

சுயவதை மனிதர்களின் வெற்றிக்குப்பின் அதிகாரம் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறுகிறது. ஏதோ ஒரு அதிகாரத்தின் மூலம் திறமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதிகாரம் இல்லையெனில் அதிகாரம் தன்வசம் இருப்பது போன்ற பாவனையை உருவாக்குவதும் அவர்களுக்கு சிரமம் இல்லை. அதிகாரம் நாளடைவில் பாசிசமாக வெளிப்படும். அதை அன்பின் பெயரால், கருணையின் பெயரால் வெளிபடுத்தக்கூட தயங்குவதில்லை. ஆனால் அறிவுஜீவி மனிதர்களோ  இவர்களை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை என்பதை அவர்கள்  அறிந்துணர  போவதுமில்லை. தன் மனதின் சூட்சமங்கள் அறியாதவர்கள் இந்த அறிவுஜீவிகள் என தங்களுக்குள் நம்புகிறார்கள். இந்த நுண்ணிய அவதானிப்புகளை அவர்களுக்கு எளிதாக தன்வசப்படுகிறது எனில் எப்படி ஒரு அவிழ்க்கமுடியா  சிக்கலை வழங்கலாம் என காத்துக் கொண்டிருப்பார்கள்.

சுயவதை ஆளுமையை பழக்கப்படுத்தி நாளாகுகையில், அது தனிப்பட்ட ஆளுமைக்குள்ளும் அதிகமாக வெளிப்படும். சாதரணமாக முடிக்க வேண்டிய காரியத்தை பூதாகரமாக்கி  படாடோப படுத்துவார்கள். இது நேர விரயத்துடன் ஆற்றல் வீணடிப்பதாகும். உதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய காரியத்தை வேண்டுமென்றே தன் ஈகோவினால் உயர்நீதிமன்றத்தில் சந்திக்கும்படி செய்வார்கள். அதனால் இழப்பது பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை.  பிரச்சனை இருந்துக்கொண்டே இருப்பதை ஒரு போதையாக மாற்றிக் கொள்வார்கள். பிரச்சனைகள் அதிகமாக புழங்கும் துறை என்ன என்பது லேசில் இவர்களுக்கு பிடிபட்டுவிடும்.

ஆரம்பநிலை சுயவதையினருக்கு குழுவாக இணைந்து பணிபுரிய ஏராளமான உளவியல் சிக்கல் தென்படும். ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுனராக தன் பங்களிப்பை செலுத்தியபின்  ஒருங்கிணைப்பாளர் அடுத்ததுறை வல்லுனரிடம் பணி நிமித்தமாய் நாடுவார். அதை இவர்களால் சகிக்க இயலாது. அதனால் அந்த குழு உருவாக்கும் ஒன்றை ஏதாவது செய்து முட்டுக்கட்டை போடுவார்கள். கடைசியில் அந்த தயாரிப்பு முழுமையடையாமல் போகிறது. அதற்காக அவர்கள் கலங்குகிறார்கள். இந்த துன்பத்தையும் தன் வெற்றிக்கான சாலையில் போட்டு மிதித்து அக்கினி வெயிலில் அடுத்த துன்பத்திற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.  இவர்களுக்கு சுயநிலைபாடு என்று எதுவும் இல்லை. கடந்தகால சுயவதை முன்னோடியே இவர்களின் ஆதர்சம். அந்த முன்னோடியின் வாழ்க்கையையே இவர்களும் வாழ்வர். முன்னோடியின் பாடுகள் அளவிற்கு தமக்கு வரவில்லையெனில் பெரும் மன உளைச்சல்தான்.
அறிவுஜீவிகள் சுனாமியென தாக்கும் உயர்தர பிரச்சனைகளை தந்திரத்துடன் எதிர்கொண்டு எளிதாக களைகிறார்கள். இதைக் காணுகையில் எரிச்சல் அடைவார்கள். அல்லது கண்டும் காணாததுபோல் அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்வார்கள்.    

தன்னிருப்பில் ஈகோ குவியலாக காணப்பட்டாலும், அன்பான தோரணையோடு பழகுவதில் நல்ல நடிகர்கள். ஆனால் உடல் மொழியிலும், பார்வையிலும் இவர்களை இனம்காணுவது மிக எளிது. இப்படியான மனிதர்களே அதிகம் வெற்றி பெற்றிருப்பதால் அவர்களின் போக்குதான் தான் சரியானது என அடுத்த தலைமுறை சுயவதை மனிதர்களுக்கும் பின்தொடர்கிறது. இவர்களுக்குத்தான் அடுத்தவர்களின் வெற்றி பொறாமையாகவும், வெறுப்பாகவும் மாறி அவர்களை அழிக்க துடிக்கிறது. அதன்மூலம் கூட ஒரு பிரச்சனை உருவாகலாம் இல்லையா..? இவர் அஸ்திவாரத்தை யார்மீது வீசுகிறாரோ! அவருமே இந்த மனநிலையில் பயிற்சி அடைந்தவர்தான்.

சுயவதை மனிதர்கள் அனைவருமே பலவீனமானவர்கள். தன் இருப்பை நிறுவுவதில் தீவிர ஆர்வம் காட்டுவதற்கு இவர்களுக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மை முக்கிய காரணம். அறிவுஜீவிகளை பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு உபயோகிக்க அவர்களிடம் சிரித்து நளினமாக உரையாடுவார்கள். அவர்களின் பொருளியல் மதிப்பையும் இவரே தீர்மானிப்பார். அதை ஒரு உயர்ந்த மதிப்பாக மிகைபடுத்தி  காட்டிக்கொள்வார். ஒருவன் எத்தகைய சாதனை புரிந்தாலும், அரிய சிந்தனைகளை வழங்கியிருந்தாலும்,  இன்னொரு மனிதனுக்கு எந்தவித மனஸ்தாபத்தையும் அளிக்காமல் அறத்துடன் வாழ்ந்தாலும் இவையாவும் அவன் இருப்பிற்கான மரியாதையை அல்லது அங்கீகாரத்தை அளிப்பதில்லை. அவனின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பும் அதிகார பலமும் கொண்டே அவனின் இருப்பிற்கான அங்கீகாரத்தை சுயவதை சமூகம் வழங்குகிறது.   

சுயவதை மனிதர்கள் சமூகத்தில் முதன்மையாக ஆவதற்கும், மக்களின் ஆதர்சமாக ஆவதற்கும் ஒரு நீண்ட மரபு காணப்படுகிறது. உடலை மையமாகக் கொண்ட நிலபிரபுத்துவ மரபு. இங்கே சுயவதை என்பது உடல்வலிமையின் மாற்று வடிவம். போருக்கு சென்று வீரமரணம் அடையும் போர்வீரனை கொண்டாடுவதன் நீட்சி தான் இந்த சுயவதை. நிலபிரபுத்துவத்தை கடந்து முதலாளித்துவ மற்றும் நவீனத்துவத்தில் இந்த உடலை மையமான கொண்ட விழுமியங்கள் கிடையாது. இங்கே முக்கிய மூலதனம் மூளை மட்டுமே.

நவீன மரபின் சாதனையாளர் தன்னை மேம்படுத்த தினம்தினம் புதிதாக கற்றுக்கொள்வதில் மட்டுமே கவனம் இருக்கும். வளமையான சிந்தனையுடன் இருப்பதால்  பொதுநீரோட்டத்தில் தன்னை ஒப்புக்கொடுக்க முடிவதில்லை. அதனால்  பொருளியல் சார்ந்த தேவைகள் மிகையாக காணப்படும். பார்க்க பஞ்சத்து ஆண்டி போன்றுகூட காணப்படலாம். ஆனால் அதைக் குறித்த எந்த கவலையோ, குற்றச்சாட்டோ இந்த சமூகத்தின்மீது இராது. நான் கஷ்டபடுகிறேன், நிறைய நாள் பட்டினி கிடந்தது சாதித்தேன், கிழிந்த செருப்போடும், சட்டையோடும் இந்த தெருவில் நடந்து வேலை தேடினேன் என்பது போலான நிலபிரபுத்துவ கூச்சல்கள் இருப்பதில்லை. அமைதியாக தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மட்டும்தான் ஈடுபாடு இருக்கும். நாளடைவில் அசலான கலைஞனாக அவன் காலத்திற்குப்பின் அடையாளம் காணப்படுவான். சுயவதை மனிதர்கள் நிகழ்காலத்தில், கடந்தகாலத்தின் நிலபிரபுத்துவ விழுமியங்களின் வழி வாழ்வதால் தங்கள் காலத்திற்குப்பின் காலவதியாகிறார்கள்.  

ஐசக் பேசில் எமரால்ட்
22.06.2019

No comments:

Post a Comment